கோவில்களில் செய்யப்படும் தேவதா ப்ரதிஷ்டைகளை குறித்த விவாதம் பல இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது . இது தொடர்பாக பலருக்கும் குழப்பங்கள் இருக்கின்றன . அரசியல் சரி நிலைகள் , அரசியல் , மத நம்பிக்கை என்று பல்வேறு தளங்களில் ப்ரதிஷ்டை தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஒரு சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன் ,
அ) பொதுவாக கோவில்களை அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவர். இவை முறையே ஸ்வயம்வியக்தம் / சுயம்பு , தேவ ப்ரதிஷ்டை , ரிஷி ப்ரதிஷ்டை , மனுஷ ப்ரதிஷ்டை ஆகும் . ஸ்வாமி தானாக உருக்கொண்டு எழுந்த இடங்களை ஸ்வயம் வியக்தம் / சுயம்பு என்பார்கள். திருப்பதி ஒரு உதாரணம் . சுயம்பு லிங்கங்களும் அப்படியே . இத்தகைய கோவில்களில் எக்காரணத்தாலும் சைதன்யம் குன்றாது என்பது ஆன்றோர் வாக்கு. பிறகு வரும் தேவ ப்ரதிஷ்டை ரிஷி ப்ரதிஷ்டை ஆகியவை முறையே தேவர்கள் ரிஷிகள் ஆகியவர்களால் செய்யப்பட்டவை. இங்கு அந்தந்த தேவர்களும் ரிஷிகளும் எப்போதும் சூக்ஷ்ம ரூபத்திலாவது ஸ்வாமிக்கு பூஜை செய்து ஏனைய பூஜா லோபங்களை வீரியம் இழக்க செய்வார்கள் .
ஆ) இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல வேண்டியிருக்கிறது . மேற்கண்ட கோவில்களில் சைதன்யத்திற்கு ஊறு வராது என்று சொல்வது இஷ்டப்படி கூத்தடிப்பதற்கான அனுமதி சீட்டல்ல . எதையுமே தலைகீழாக புரிந்து கொள்ளும் நபர்கள் அதிகரித்திருப்பதால் சில விஷயங்களை விசேஷ ச்ரத்தை எடுத்து விளக்க வேண்டியிருக்கிறது . ஒரு மாணவன் சுய முயற்சியாலேயே நன்றாக படிக்கிறான் என்றால் அதற்கு பொருள் அவனுக்கு ஆசிரியர்களது கவனம் , கற்பித்தல் தேவையில்லை என்றல்ல . நேர் மாறாக அவனுக்கு இன்னமும் நன்றாக கல்வியை போதிக்க வேண்டும் . அது சவாலான காரியமும் கூட . அதே போலத்தான் தானாகவே ப்ரகாசிக்கும் மேற்கண்ட கோவில்களில் இன்னமும் அதிக கவனம் எடுத்து ஆகமம் பிசகாமல் பூஜைகளை செய்ய வேண்டும் என்பதே நுட்பம் .
இ) இனி இருப்பது மனித ப்ரதிஷ்டை கோவில் . அதாவது மானுடன் ஒருவனது வேண்டுகோளை ஏற்று ஆகமம் வல்ல ஆச்சாரியன் செய்யும் ப்ரதிஷ்டை . யார் இத்தகைய கோவில்களை கட்டலாம் ? இறை பக்தியில் ஊறியவர்களோ , கோவில் கட்டுவதற்கான உத்தரவை ஏதாவது ஒரு விதத்தில் இறைவனிடம் இருந்து பெற்றவர்களோ , தன்னை ஒரு கருவியாக்கி இறைவன் உலகோருக்கு அருள் செய்கிறார் என்ற எண்ணத்துடன் ஆகம ஆச்சாரியனை சரண்டைந்து அவர் வசம் தனக்கு ஏற்பட்டிருக்கும் ப்ரேரணையை சொல்லி , அது சரியானதும் உண்மையானதும் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர் வழிக்காட்டுதலில் இறைவனை ப்ரதிஷ்டிப்பதற்கான கோவிலை கட்டலாம் . இவ்வாறன்றி ஆணவத்தாலோ , மமகாரத்தாலோ, போட்டிக்காகவோ தெய்வ பிரதிஷ்டையை செய்ய முடிந்தால் அது நல்ல விதத்தில் முடியாது. அத்தகைய தேவாலயங்கள் காலகாலமாக ஒரு தனி மனிதனின் / சமூகத்தின் வீழ்ச்சியின் அடையாளமாக மட்டுமே எஞ்சியிருக்கும். இறைவனை மையப்பொருளாக கொள்ளாத எந்த சமயச்சடங்கும் நன்மை தராது . பகவானுக்கு விதிக்கப்பட்ட நைவேத்யமான பால்பாயசத்தை செய்ய வேண்டும் என்று அடுப்பை பறற வைத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் . நமக்கு பால் பாயசம் அருந்தும் ஆசை வந்து அதனை நைவேத்யமாகவே செய்துவிடலாமே என்று எண்ணினால் அடியில் பிடிக்கத்தான் செய்யும் . வசூலுக்காக கோவில் கட்டும் வழிமுறைகளை சாணக்ய தந்த்ரம் என்று போற்றத்தொடங்கிய காலத்திலேயே பிரச்சனைகளும் முளைக்கத் தொடங்கின .
ஈ) மேல சொன்னது படி நூதனமாக ஒரு கோவிலைக்கட்டி அதில் ஒரு தெய்வ சக்தியை பிரதிஷ்டை செய்வதற்கு என்றாலும் சரி , பழைய கோவில்களில் புனருத்தாரணம் செய்வது என்றாலும் சரி , அதற்கு தக்க ஆச்சாரியன் தேவை . சைவாகமம் வைணவ ஆகமம் தந்த்ர பத்ததிகள் போன்றவை இந்த ஆச்சாரியனது லக்ஷணத்தை விளக்குகின்றன . சுருக்கமாக சொன்னால் ஆச்சாரியனானவன் தெய்வ பக்தி உடைய , ஆகம ஞானம் உடைய தீக்ஷிக்கப்பட்ட உபாசனையும் அனுஷ்டானமும் உடைய அதி உத்தமமான பிராமணனாக இருக்க வேண்டும் . ஆகம ஞானம் என்றால் ஏதாவது ஒரு அண்ணாவின் பாடசாலையில் பரோட்டா உண்டு நாலு கும்பாபிஷேகங்களுக்கு துணை நடிகர்களாக போய் கூட்டத்தோடு கூட்டமாக சான்றிதழை வாங்கிக் கொண்டு வருவது அல்ல . ஆகமங்கள் உட்பொருள் தெரிய வேண்டும் என்றால் தக்க சக்தி நிபாதம் இருக்க வேண்டும் . ஒவ்வொரு ஆகமத்திற்கும் அதற்கான துறவுகோலான மந்த்ரங்கள் உண்டு. அவறறை நியமத்துடன் உச்சரித்து புரச்சரணம் செய்து தேவதா அனுக்கிரகத்திற்கு பாத்திரமானால் மட்டுமே ஆகமம் திறந்து தனது ரகசியங்களை வெளியிடும் . இதற்கு முதற்படி என்பது இந்த பாதையில் சஞ்சரிக்கும் குருவை பெறுவது என்பதாகும். இல்லாவிட்டால் ஆகமக் கல்வி என்பது ஏட்டுச்சுரைக்காயாகக் கூட தெளியாது . ஆகமத்தை விடுங்கள் , சில மந்த்ர சுவடிகள் கூட அதற்கான மந்த்ர சாவி இல்லாவிட்டால் பொருள் தராது . உங்களுக்கு நன்றாக தெரிந்த லிபியாக இருந்தாலும் வாசிக்க விடாது . ஆகவே இங்கு சொல்லப்படும் ஆகம ஞானம் என்பது எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள் . பக்தி , ஞானம் , சக்தி நிபாதம் , ஒழுக்கம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பிணைந்து பரஸ்பரம் வலுப்படுத்துபவைகளே . அருள் இல்லாதவர்கள் ஆகம ப்ரவேசம் செய்தால் விபரீத ஞானமே ஏற்படும் என்று அறிக
உ) மேலே சொன்ன விஷயங்கள் பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் நண்பர்களுக்கு கூட ஆச்சாரியன் உத்தம அந்தணராக இருக்க வேண்டும் என்பது மனக்கசப்பை தரலாம். அந்தணர் என்றால் பிறப்பாலும் வாழ்வாலும் அந்தணர். அந்தண மனநிலையை மட்டும் கொண்டவர் என்றோ அந்தண வாழ்க்கையை மட்டும் வாழ்பவர் என்றோ பூர்வர்கள் யாரும் சொல்லவில்லை . பிறப்பால் அந்தணனாக இருக்க வேண்டும் அதனுடன் அந்தணருக்கு உடைய சாத்வீக தன்மையை கொண்டிருக்க வேண்டும் என்று தெளிவாக நூல்கள் சொல்லுகின்றன . இது தவிர அந்த அந்த பிரிவு சொல்லும் ஆதி சைவர் ஆதி பாஞ்சராத்ரர் , வைகானசர் போன்ற கொடி வழியும் இன்றியமையாததே . இது நவீன மனதிற்கு ஏற்றதாக இல்லை என்று புரிகிறது . குறிப்பிட்ட வாழ்க்கை முறையும் ஆகம அறிவும் மட்டும் போதும் என்றிருந்தால் எங்களைப் போன்ற பலருக்கு வசதியாகவே இருந்திருக்கும் தான் . ஆனால் சாஸ்த்ரம் இந்த விஷயத்தை தெளிவாக நிர்ணயம் செய்திருக்கிறது என்னும் போது அதில் இருக்கும் நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். அதை விட்டு நமது விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வளைக்கலாம் என்றால் பிறகு அடிப்படைகளே அர்த்தமற்றவையாகிவிடும் . எரிச்சலோ கடுப்போ இல்லாமல் ஆணவம் அஹங்காரம் இல்லாமல் நிதானமாக சிந்தித்தால் உண்மை புலப்படும்.
ஊ) பலருக்கும் வர்ண விஷயத்தில் மனக்குறை ஏற்பட காரணம் அவர்களது அனுபவங்களே. சாக்கடையை எல்லா ஊர்களிலும் கிடைக்கும் . ஆனால் கங்கை நீர் வேண்டும் என்றால் நாம் தான் தீர்த்தாடனம் செல்ல வேண்டும் . ஆச்சரிய அர்ச்சகர்கள் விஷயத்திலும் இப்படித்தான் . தலைக்கு குளிக்காமல் எண்ணெய்யை பூசி சமாளித்துக் கொண்டு இளித்துக் கொண்டு கும்பாபிஷேக ஒப்பந்தம் பிடித்து காசு தேற அலைபவர்களைத்தான் உங்களில் பலர் அதிகமும் கண்டிருக்க கூடும் . அதனால் தான் வெறுப்பு கசப்பு எல்லாம் ||( இனி முற்றுப்புள்ளிக்கு பதிலாக இக்கட்டுரையில் இரு கோடுகளையும் || சில இடங்களில் பயன்படுத்துவேன் ) || கத்திக் கொண்டே இருப்பதால் கழுதையின் இருப்பு எல்லோருக்கும் தெரிகிறது . மெல்ல கனைப்பதால் குதிரைகளின் இருப்பு பலருக்கும் தெரிவதில்லை . ப்ரதிஷ்டையை பணம் சம்பாதிக்கும் வழியாக அல்லாமல் தங்களது மதக் கடமையாக செய்யும் அர்ச்சகர்கள் / ஆச்சாரியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் . இவர்கள் தளும்பாமல் நிறைகுடமாக அமைதியாக இருக்கிறார்கள் . இவர்களது அணுகுமுறையை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் .
எ) புதிய கோவில் தொடர்பாக பேச வந்தாலும் சரி , ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் என்றாலும் சரி நல்ல ஆச்சாரியன் தனது உபாசனா மூர்த்தியின் அனுமதி இல்லாமல் ஒரு அடியை கூட எடுத்து வைக்கமாட்டான் . உத்தரவு கிடைக்காவிட்டால் வர முடியாது என்று தெளிவாக சொல்லி விடுவான் . ப்ரதிஷ்டைக்கு வர சம்மதிக்க வேண்டும் என்றால் அதற்கான சமிக்ஞை அவருக்கு கிடைத்திருக்க வேண்டும் . இல்லாவிட்டால் இல்லை தான் . அவ்வாறு உத்தரவு கிடைத்த பிறகு ப்ரதிஷ்டை செய்யும் முஹுர்த்தத்திற்கு ஒரு மாதம் முன்பே விரதங்களை தொடங்குவார் . குருவை தரிசித்து ஆசிர்வாதம் பெறுதல், தீர்த்தாடனம் க்ஷேத்ராடனம் ஆகியவை முதல் படிகள் . பிறகு அகப்புற தூய்மைக்கான விரதங்கள். இதில் கடுமையான உண்ணா நோன்புகள் கூட உண்டு . இதற்கு பிறகு ப்ரதான தேவதையின் மந்த்ரத்தை லகு புரச்சரணம் செய்து விடுவார்கள் . விரிவான பூத சுத்தி , தொடர்ந்த நியாசங்கள் ஆகியவையும் இருக்கும் . இதற்கு பிறகு அவரவர் ஆகமம் விதித்த காலத்தில் காப்புக் கட்டிக்கொள்வர். ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்கவும். காப்புக்கட்டி கொள்வதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே பூர்வாங்க சுத்தி மற்றும் சாதனா க்ரியைகள் தொடங்கி விடும் . பலர் மௌன விரதத்தையும் கைக்கொள்வது உண்டு . காப்புக்கட்டி விட்டால் பிறகு காப்பை அகற்றும் வரை அந்த ஆச்சாரியனுக்கு எந்த தீட்டுத் தொடக்கும் இல்லை . ஜனன மரணங்கள் அவனை பாதிக்காது . மனதளவில் கூட அவன் அவை குறித்து எண்ணக் கூடாது . ஜனன மரண காரியங்கள் நடக்கும் இடத்திற்கு செல்லவும் கூடாது . காப்புக்கட்டிவிட்டால் கோவில் எல்லைக்குள்ளாவது , கோவில் கோபுரம் நிழல் விழும் எல்லைக்குள்ளாவது , சன்னதி தெருவிலாவது வசிக்க வேண்டும்.
ஏ) ஒரு முக்கிய புள்ளி நமது வீட்டிற்கு வந்தாலே நாம் அவருக்கு இருப்பதிலேயே சிறந்த பானபாத்திரத்தில் குடிநீர் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் . அதற்கு ஆலாய் பறக்கிறோம் . ப்ரதிஷ்டையில் வந்தருளப் போவது தெய்வம் என்னும் போது அவருக்கு மிகவும் சுத்தமான சிறந்த பொருட்களைத்தான் சமர்பிப்பது என்ற தெளிவு இருக்க வேண்டும் . திரவியங்களும் சரி பரிச்மிகளும் சரி ஆகச்சிறந்தவர்களாகவும் தூய்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதை விட ஒரு கரண்டி சுத்தமான ஹிம்சையற்ற பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வது தான் சிறந்தது . தெய்வ அருளை கணக்கில் கொள்பவன் பின்னதை தேர்ந்தெடுப்பான். காணொளிக்காக பூஜை செய்பவன் பின்னதை தேர்ந்தெடுப்பான் . ஒரு ஆச்சாரியனுக்கு இந்த தெளிவு வேண்டும் .
ஐ) இத்தகையை க்ரியைகளை ஆத்ம சுத்தியுடன் செய்யும் பல ஆச்சாரியர்கள் என்னிடம் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர் . பிரதிஷ்டை செய்யும் போது இருக்கும் மிகப்பெரிய சவாலே புத்தியை கைவிட்டு தெய்வ சங்கல்பத்திற்கு ஒப்புக் கொடுப்பது தான் . இதற்கு பொருள் அவன் விட்ட வழி என்று மனச்சோர்வு கொள்ள வேண்டும் என்பதல்ல . கற்ற ஆகமக் கல்வி சாமர்த்தியமாக உருக்கொண்டு எழும் போது அதனை வெட்டி எறிந்து தெய்வ ஹிதம் என்னவென்று சிந்திப்பது தான். விதி மீறலுக்கான பிராயசித்தத்தை எல்லா ஆகமங்களும் கூறுகின்றன . அதில் இருந்து அர்ச்சான் புரிந்து கொள்ள வேண்டியது இவை விலக்கப்பட வேண்டும் என்பது தான் . மேலும் தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டால் அதற்கு பிராயசித்தம் செய்து கொள்ள வழி இன்னது என்பதும் தான் . ஆனால் ஆகமக் கல்வி பெற்றதாக கூறிக்கொள்ளும் பலரும் பிராயசித்த க்ரியை தமக்கு தெரியும் என்பதாலேயே விதி மீறல்களை செய்ய ஊக்குவிக்கின்றனர் . ” அது பிரச்சனை இல்லை . துணிந்து செய் . ஒரு லகு சம்ப்ரோக்ஷணம் செய்து நிவர்த்தி செய்துவிடலாம் ” என்று யாராவது ஆலோசனை சொல்வதை கேட்டால் அவர் சக்தி நிபாதம் இன்றி ஆகமத்தை அணுகி இருக்கிறார் என்று அறிக . ஒரு ஆகம அறிஞர் இதனை எளிய முறையில் விளக்கினார் . வீட்டின் மையப்பகுதியில் அசுத்தம் ஏற்பட்டால் கூட தண்ணீர் விட்டு கழுவினால் சுத்தமாகிவிடும் என்பது விதி . இது ஏதாவது சிறு குழற்றை தெரியாமல் அசுத்தம் செய்துவிட்டால் பின்பற்ற வேண்டிய விஷயம் . அது தான் தண்ணி விட்டு கழுவினால் போதுமே என்று யாரும் நடு வீட்டை கழிப்பறையாக பயன்படுத்துவதில்லையே ? இதே தெளிவு ஆகமம் தர்ம சாஸ்த்ரம் எல்லாம் சொல்லும் ப்ராயசித்தங்களை குறித்து சிந்திக்கும் போதும் இருக்க வேண்டும் என்பார் .
ஒ) ஆகம நூல்களில் இடைச்சொருகல்கள் உண்டு. பூர்வ மீமாம்சையின் தாக்கத்தால் ஏற்பட்ட சில குழப்படிகள் உண்டு . இவற்றை எல்லாம் கண்டுபிடிக்க எந்த கையேடும் இல்லை . தரப்படுத்தப்பட்ட செயல்முறை வழிகளும் (SOP) இல்லை . இறையருளால் ஏற்படும் தெளிவைக் கொண்டே ஆச்சாரியன் தனது வழியை தீர்மானிக்க வேண்டியிருக்கிறது . இவற்றில் பலவும் குப்தமான கிரியைகள் என்பதால் இவை விவாதத்திற்கு உள்ளாவதில்லை . தனக்கு வசதியானவற்றை தான் பெற்ற ஞானம் என கருதும் ஆச்சார்யன் அதோ கதியையே அடைவான். கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாளைக்கு ஓடும் . இவர்கள் செய்து வைத்த ப்ரதிஷ்டையின் லக்ஷணம் எட்டே நாழிகைகளில் தெரிந்து விடும் . அனுக்ஞை பெறுவது முதல் பாலிகை வரை பல இடங்களிலும் தெய்வ ஹிதத்தை அறிந்து கொள்ளும் வழிகள் உண்டு . அனுக்ஞை என்பது இயந்திர தனமாக செய்யப்பட வேண்டிய விஷயம் அல்ல . அனுக்ஞா கலசம் என்பதில் அக்ஷரார்த்தத்தில் தெய்வ உத்தரவு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகள் உண்டு. இப்படியாக இறை சித்தத்தையும் அருளையும் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்யும் ஆச்சாரியன் மிக கவனத்துடன் பிரதிஷ்டையை செய்வார். இருந்த விரதங்களின் பலமும் ஜபித்த மந்திரங்களின் வீரியமும் தெய்வ கடாக்ஷமும் ப்ரத்யக்ஷமாக கிரியைகளில் தெரிய வரும். எந்த வித முயற்சியும் இல்லாமல் சில காரியங்கள் சித்திக்கும். பிரதிஷ்டை வைபவம் நடக்கும் நாட்களில் எந்த ப்ரயத்தனமும் இல்லாமல் அஹோராத்ரம் விழித்திருக்க முடியும் . பசிக்காது ; தாகம் எடுக்காது. அதனாலேயே கழிப்பறைக்கு அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் வராது . மூச்சு தீர்க்கமாக நிதானமாக ஓடும். தியானத்தில் இறைவன் வடிவம் எளிதில் தெளியும் . பூஜை செய்யும் போது எந்த சோர்வம் இருக்காது. ஒரு விதமான ப்ரசாந்ததை இருக்கும் . இவ்வாறான அகப்புற நிலைகளுடன் ஆச்சாரியன் இவ்வுலக மக்களின் நன்மையை பொருட்டு தெய்வத்திடம் திருவுருவிலும் சாநித்யம் கொள்ளுமாறு செய்யும் ப்ரார்த்தனை பலனளிப்பதே பிரதிஷ்டையாகும்.
இதற்கு பயிற்சி இத்யாதிகள் எதுவும் கொடுக்க முடியாது . பூர்வர்கள் செய்த புண்ணியம் , சிறு வயதிலிருந்தே செய்து வரும் பூஜை முதலியவை அனைத்தும் சேர்ந்து தான் நல்ல ஆச்சாரியனை உருவாக்குகிறது . இன்ற பல ஆகம பாடசாலைகளில் டம்மி சிலைகளை வைத்து அலங்காரம் செய்ய ப்ரதிஷ்டை செய்ய எல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள் . இதில் எந்த வித அர்த்தமும் இல்லை . மாதிரிகளை வைத்து பயிற்சி எடுப்பதோ simulation போன்றவைகளோ தெய்வ காரியத்தில் எடுபடாது . சிறு வயதில் இருந்து செய்து வரும் ஆத்ம பூஜை தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பூஜைகளை க்ரியைகளை செய்து அதன் வாயிலாக அடையும் ஞானமே பலன் தரும் . வீட்டு சுவாமிக்கு இரண்டு பூ இடுவது என்பதில் தொடங்கி அப்பா ஊரில் இல்லாத போது சுவாமிக்கு தண்ணீர்விட்டு பொட்டு வைத்து நைவேத்யம் காட்டுவது (காட்டுவதுதான் 🙂 ) என்று படிப்படியாக ஒரு அர்ச்சகனுக்கு தெய்வத்துடனான உறவு ஏற்படுகிறது . இந்த பாதையில் ஒரு எல்லை வரைக்கும் நம்மில் சிலரும் பயணிக்கவே செய்கிறோம் . அர்ச்சக குலங்களை சார்ந்தவர்கள் இயல்பாகவே ஆத்மார்த்த பூஜையைத் தாண்டி பரார்த்த பூஜையையும் செய்யத் தொடங்குகிறார்கள். ஆகையால் தான் ஆகமங்கள் விதித்தப்படி அவர்களே கோவில் ஆராதனையை செய்ய வேண்டும் என்று நம்புகிறேன் .
இதில் இன்னமும் இரண்டு விஷயங்கள் உள்ளன . அவர் அப்படி பூஜை செய்து அருள் பெறவில்லையா இவர் இப்படி பூஜை செய்து அருள் பெறவில்லையா , எல்லா அருளாளர்களும் ஆகமப்படித்தான் பூஜை செய்தார்களா ? என்று பலர் கேட்பார்கள் . அபூர்வ பிறவிகள் விதிவிலக்குகள் எல்லாம் விதியாக மாட்டார்கள் . தெரு விளக்கு ஒளியில் படித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆனவர்கள் உண்டு . அதற்கு என்று நம் குழந்தைகளிடம் தெருவில் இருந்து படி. அதுவே போதும் என்று சொல்வோமா ? கட்டாயமாக இல்லை . நமக்க மேற்படி இஅபக்கள் அபூர்வமானவர்கள் என்று தெரியும். அவர்கள் வாழ்க்கையை பொது உதாரணமாக்க முடியாது என்பதும் தெரியும் . ஆகம விஷயத்திலும் இது பொருந்துமே .
இந்த இடத்தில் இன்னொரு கேள்வி வருகிறது . மனித வாழ்வில் இருந்து ஏராளமான உதாரணங்களை தருகிறோம் . ஆனால் பேசுவது தெய்வ விஷயமாயிற்றே . தெய்வத்திற்கு இப்படிப்பட்ட அற்பத்தனங்கள் எல்லாம் உண்டா ? கலப்பட சந்தனத்தை பூசினால் கடுப்பாகிறவர் கடவளாக இருக்க முடியுமா ? என்றெல்லாம் கேள்வி வரும் . தெய்வத்திற்கு அற்பத்தனங்கள் கிடையாது . மனிதர்களை போன்ற விகாரங்களும் இல்லை . ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் இலையோ பூவோ வெறும் நீரோ போன்ற எளிமையான விஷயங்களை தந்தாலும் கூட ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் . கீதையில் அவர் காட்டும் வழி அது. பக்குவமான பக்தன் செய்யும் ஆத்மாராதனை குறித்த விஷயம் அது. ஆனால் பரார்த்த பூஜை என்று வந்தால் அதே பகவான் சொன்ன பாஞ்சராத்ர மார்க்கத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும் . என் இஷ்டபடி கோவிலில் பூஜை செய்வேன் என்று நாம் சொல்ல முடியாது . இதில் எந்த விரோதமும் இல்லை . நீங்கள் எவ்வாறு ஒரு தேவதையை அணுகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயம் .
ஓ) விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன். ஒரு சிறிய விளக்கம் கூட . ப்ரதிஷ்டை என்பது திஷ்ட அதாவது இருந்துதல் என்ற அடிப்படையில் அமைந்த சொல் என்பர் . இங்கே இருத்துதல் என்பது பிம்பத்தை பீடத்தில் ஏற்றி வைத்தல் மட்டும் தான் என்று பலரும் எண்ணுகின்றனர் . அதுவும் முக்கியமான சடங்கு தான் . ஆனால் முக்கியமாக கூறப்படும் இருத்துதல் என்பது பிம்பத்தில் இறைசக்தியை இருந்துதலே / நிலைநிறுத்துவே . பிரதிஷ்டை / கும்பாபிஷேகம் முடிநது விட்டால் எல்லாம் வெற்றிகரமாக முடிந்து விட்டது . பஞ்சப்படி பயணப்படி பெற்று ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் பாக்கி என்று பலரும் எண்ணக்கூடும் . அப்படி அல்ல. பூர்வாங்க க்ரியைகள் இருப்பது போலவே நாட்கணக்கில் நடக்கும் உத்ராங்க க்ரியைகளும் உண்டு . அதை விட முக்கியமான விஷயம் பிரதிஷ்டிக்கப்பட்ட தெய்வ சக்தியை நித்தமும் கவனத்துடனும் பக்தியுடனும் பூஜை செய்வதற்கான அர்ச்சுகளை கண்டுபிடித்தல் . மலையாள தேச வழக்கு ஒன்று உண்டு . தந்திரியை ( பிரதிஷ்டை செய்த ஆச்சாரியனை ) ஒரு கோவிலுக்கு தந்தை ஸ்தானம் உடையவர் என்பார்கள் . தாய் ஸ்தானம் மேல்சாந்திக்கு ( நித்ய பூஜை செய்யும் அர்ச்சகனுக்கு) , தாய் தான் நித்யப்படி கவனிக்க வேண்டும் ; போஷிக்க வேண்டும் . ஆகவே நித்ய பூஜைக்கு தக்க அர்ச்சகனை கண்டு பிடிப்பதும் மிகவும் முக்கியமானது.
சிலர் தங்களுக்கு ராசியான பேனாவை பிறருக்கு எழுதக் கொடுக்க மாட்டார்கள் . சிலருக்கு தங்கள் இரு சக்கர வாகனத்தை பிறரிடம் ஓட்டக்கொடுக்க பயம். ஜட பொருட்கள் விஷயத்தில் இவ்வளவு கவனமாக இருக்கும் நாம் தெய்வ விஷயத்தில் எத்தனை கவனமாக இருக்க வேண்டும். தெய்வ அருளுடன் கூடி தான் செய்த கிரியைகளின் பலனால் தெய்வ சாநித்யம் பிம்பத்தல் வந்து விட்டது என்று நம்பும் ஒருவனால் அந்த சாநித்யத்திற்கான நித்ய ஆராதனையை யார் வேண்டுமானாலும் செய்யட்டும் என்று விட்டுப் போகவே முடியாது . தக்க அர்ச்சகன் வசம் தான் ஒப்படைக்க மனம் வரும். ப்ரதிஷ்டை செய்ய தீர்மானித்த நாளில் இருந்தே அர்ச்சகனையும் ஆச்சாரியன் தேடிக் கொண்டுதான் இருப்பார் . சரியான விதத்தில் ப்ரதிஷ்டை நடக்கப் போகிறது / நடந்து விட்டது என்றால் தக்க அர்ச்சகன் கிடைக்காமல் இருக்க மாட்டார் . ஒரு கோவில் சாநித்தியத்துடன் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க எளிமையான வழி அக்கோவிலில் தலைமுறை தலைமுறையாக ஒரே அர்ச்சக குடும்பம் தான் இருக்கிறதா ? அல்லது குறைந்த பட்சம் ஆண்டு கணக்கில் ஒரே அர்ச்சகர் த்ருப்தியாக கைங்கர்யம் செய்கிறாரா என்பது தான் . அர்ச்சகனும் ஆச்சாரியனும் கோவில் பணியாளர்களும் திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதே அக்கோவிலில் நல்ல சாநித்யம் இருக்கிறது என்பதற்கு அடையாளம் . ப்ரதிஷ்டை / கும்பாபிஷேகம் முடிந்த உடனேயே இடத்தில் காலி செய்து சக்ஸஸ் பார்ட்டியில் ஈடுபடும் கல்நெஞ்சம் எல்லாம் தொழில்முறை கும்பாபிஷேக ஒப்பந்த கோஷ்டிக்கே சாத்தியம் .
ஓள் ) தெய்வத்தை வருந்தி விளித்து இறைஞ்சி அங்கு உறையுமாறு பிரார்த்தித்த அந்த ஆச்சாரியனுக்கே அந்த தெய்வ சைதன்யத்தை காக்கும் பொறுப்பும் உள்ளது . தேவதைகளுக்கு நம் காவலோ உதவியோ தேவையில்லை . ஆனால் நம் பிரார்த்தனையின் பெயரில் ஒரு இடத்தில் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கான முறையான பூஜையையும் ஆராதனையையும் செய்வது நமது பொறுப்பாகிறது . அது தான் அறம், அதனாலேயே ஆச்சாரியன் மிகக் கவனமாக பூஜைகள் ஒழுங்காக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் . அதெல்லாம் நடக்கிற காரியமா என்று சிலர் எண்ணக்கூடும் . நடக்கும் காரியம் தான் என்ற அர்ச்சக குடிகளை சார்ந்த பெரியவர்கள் கூறுகிறார்கள். எங்கள் ஊரில் ஒரு கோவில் உண்டு . அதன் தந்திரி 200 மைல்களுக்கு அப்பால் கேரளத்தில் வசிக்கிறார் . ஆனால் இங்குள்ள பூஜைகளில் ஏதாவது குறைகள் ஏற்பட்டால் அவருக்கு தெரிந்து விடும் . யாரோ ஒற்று வேலை பார்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாம் . இரண்டாம் நபருக்கு தெரியாத விஷயங்கள் கூட அவருக்கு தெரியும் . திடீரென்று அவர் வருகிறார் என்றால் அது ப்ராயசித்த பூஜைக்காகத்தான் இருக்கும் . யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார் ; இறைந்தும் பேச மாட்டார் . வந்து கிரியைகளை அவர் பாட்டிற்கு செய்வார் . சில நேரங்களில் தவறு செய்த ஆலயக்குடியை சார்ந்தவருக்கே கூட இவர் குறிப்பிட்ட ப்ராயசித்த க்ரியைகளை செய்யும் போது தான் அது உறைக்கும் . மன்னிப்பு கேட்டு இனி செய்ய மாட்டேன் என்று உறுதி கூறுவார்கள் . எனது நண்பர் தந்திரியிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது அத்திருத்தலத்து உறையும் ஸ்வாமியின் கணங்களுள் ஒருவர் தனது நித்திய தேவார வேளையில் ( ஆத்ம பூஜையின் போது ) கோவிலில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதனை சூக்ஷ்மமாக உணர்த்திவிடுவார் என்றார் .
தமிழ்நாட்டில் ஒரு அர்ச்சகருடன் பேசிக்கொண்டிருந்தேன் . அவர் யாரிடமும் பூஜைப்பொருள் உபயம் கூட கேட்பதில்லை. ஆனால் கோவிலில் எதற்கும் குறைவில்லை . அவரும் த்ருப்தியாக வாழ்ந்தார் . எப்படி சாத்தியம் என்று விசாரித்தேன் . பூஜைகளை முடிந்த மட்டும் ஒழுங்காக செய்துவிட்டு தேவைகளை நிர்மால்யதாரியிடம் தெரிவித்தால் போதும் . அவர் ஏற்பாடு செய்து விடுவார் என்றார் . எத்தனைக்க எத்தனை நமக்கு சரியாக பூஜையை செய்ய வேண்டும் என்று எண்ணம் இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை கடவுளும் வழி காண்பிப்பார் . வேறு ஒரு கோவிலில் திருவீதி உலாவிற்கு பிரச்சனை வந்தது . காவல் நிலையம் வழக்காடு மன்றம் என்று அலைந்தும் காரியம் நடப்பது போலத் தெரியவில்லை . பட்டாச்சாரியர் கவலையே படவில்லை . விஷ்வக்சேனரிடம் சொல்லியிருக்கிறேன் . அவர் பார்த்துக்கொள்வார் . அவர் நகர் சோதனைக்கு கிளம்புவதற்கு முன் எல்லாப் பிரச்சனைகளையும் சரி செய்து விடுவார் என்று ஆணித்தரமாக சொன்னார் . அவ்வண்ணமே நடக்கவும் செய்தது. பட்டாச்சாரியருக்கு ஸ்வாமி மேலும் விஸ்வக்சேனர் மீதும் அவ்வளவு நம்பிக்கை . மேலும் எதற்காக விஸ்வக்ஸேன ப்ரதிஷ்டை இருக்கிறது என்றும் தெரியும் . அதனால் லகுவாக காரியத்தை நடத்தி விட்டார் . ஆனால் பல பெரிய கோவில்களிலேயே கூட விஷ்வக்சேனர் க்ஷேத்ர பாலர் தீர்த்த பாலர் எல்லாம் கவனிப்பு இன்றி இருப்பர். விளைவாக முன்சீஃப் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதமன்றம் வரை ஆண்டு கணக்கில் வழக்குகள் நடந்துகொண்டிருக்கும். நல்ல விதத்தில் பூஜை நடந்தால் , சாநித்யம் இருந்தால் அக்கோவிலை யாராலும் எதுவும் செய்ய முடியாது . கோவில் எல்லைக்குள் அனிஷ்ட சம்பவங்கள் நடக்காது .
ஃ) மேலே எழுதியிருப்பது எல்லாம் நடைமுறையில் சாத்தியம் தானா என்று பலருக்கு கேள்வி ஏற்படலாம். நடைமுறையில் சில இடங்களிலாவது நடக்கிறது என்பதில் தான் நமது நம்பிக்கையின் ஆணி வேர் இருக்கிறது . இதெல்லாம் கனவில் தான் சாத்தியம் என்றால் கூட கனவிலாவது நடக்கட்டும் . அதற்கும் புண்ணியம் உண்டே என்பது தான் என் பதில். இப்படி எல்லாம் நடக்கிறது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் . ஒவ்வொரு விஷயமாக சரி செய்ய முயல வேண்டும் . நல்லபடியாக விஷயங்கள் நடக்க இறைவனிடம் ப்ரார்த்திக்க வேண்டும் . நம் எண்ணம் போலத்தான் இறைவன் அருள் புரிவார் . பிரதிஷ்டை , கும்பாபிஷேகம் எல்லாம் கண்கட்டு வித்தையும் அல்ல ; தொழிற்நுட்பமும் அல்ல . இறைவன் தனது கருணாகடாக்ஷத்தால் நமக்கு காட்டிய வழி . இதனை நாம் உணர வேண்டும்.
இனி இன்னொரு கேள்வியும் வரும். ஆக ஆச்சாரியனும் அர்ச்சகனும் சரி இல்லாததால் தான் எல்லா பிரச்சனைகளுமா ? என்பதே அக்கேள்வி . யதா ராஜா ததா ப்ரஜா என்னும் வாக்கியத்தை கேட்டிருப்பீர்கள் . அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி . அதே போல யதா ப்ரஜா ததா ராஜா என்பதும் உண்மை தானே ? மக்களின் தன்மைக்கு ஏற்பத்தானே அரசனும் அமைவான் ? பூனைக் கூட்டத்திற்கு புலியா தலமை தாங்க முடியும் ? அதே விஷயம் தான் இங்கும் . பக்தர்கள் எத்தனைக்கு எத்தனை யோக்கியமாக ஒழுங்காக நேர்மையாக பக்தியுடன் இருக்கிறார்களோ அத்தனைக்கு அத்தனை தான் அவர்களுக்கான அர்ச்சகன் ஆச்சாரியன் எல்லாம் அமைவார்கள். பக்தியுடனான சாத்வீகர்கள் கோவில் எழுப்ப முயலும் போது அவர்களுக்கு அருள் புரிய இறைவன் உத்தமமான ஆச்சாரியனை அர்ச்சகனை அனுப்புகிறார் . உத்தமமான ஆச்சாரியனால் ப்ரதிஷ்டிக்கப்பட்டு உத்தமமான அர்ச்சகர்களால் பூஜிக்கப்படும் தெய்வ சைதன்யம் இன்னும் பல சாத்வீகர்களை ஈர்க்கிறது . அயோக்கியர்களை அவ்விடத்திற்கு வர விடாமல் செய்கிறது . இவ்வாறு ஒன்றன் பின் மற்றொன்றாக நிகழ்வுகள் நடக்கின்றன . முதல் புள்ளி நாம் நம்மை சரி செய்து கொள்வதே. மிச்சம் எல்லாம் தானாக அமையும் , நமக்கு எது வசதியாக இருக்கிறது என்று யோசிக்காமல் சாஸ்திரம் எது என்று யோசித்தாலே போதும் ; போலிகளை விலக்கி சாத்வீகர்களை அடையாளம் காண முடியும் .